சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீன மற்றும் இந்திய படைகளிடையே மீண்டும் மோதல் இடம்பெற்றதில் இரு தரப்பிலும் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள எல்லையில் புதன்கிழமை இந்த மோதல் இடம்பெற்றது.
கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இருநாட்டு இராணுவத்தினரும் ஆயுதங்கள் இன்றி மோதிக்கொண்டதில் 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த மோதலின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றம் நீடிக்கும் நிலையில் எல்லையில் மற்றொரு மோதல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமில் உள்ள நாகுலா கணவாய் என்ற இடத்தில் சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்றபோது இந்த மோதல் வெடித்ததாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த மோதல் குறித்து சீனா எந்தக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.