ஒரே ரொக்கட் மூலம் 143 அதி திறன் வாய்ந்த சிறிய செயற்கைக்கோள்களை ஏவி அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் ரொக்கட் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே தடவையில் 143 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-37 ரொக்கட் மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியதே இதுவரை உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக சாதனை மூலம் செலுத்தப்பட்டவற்றில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.
உலகம் முழுவதும் நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் இவற்றை அனுப்பியுள்ளது.
அத்துடன், 48 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த பிளானட் என்ற ஒரே நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.