சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தையடுத்து பூமிக்கு அடியில் 1,207 அடியில் கடந்த 14 நாட்களாக சிக்கித் தவித்த 11 தொழிலாளர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனாவின் சாந்தோம் மாகாணத்தில் யாண்டைன் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த 10-ஆம் திகதி இடம்பெற்ற வெடி விபத்தை அடுத்து 22 தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 12 தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது கடந்த 17-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும்பணியை துரிதப்படுத்திய மீட்பு குழுவினர், நேற்று11 பேரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களில்பெரும்பாலானோர் நல்ல நிலையில் இருப்பதாக சுரங்க மீட்புக்கான தலைமை பொறியாளர் சியாவோ வென்ரு இன்று திங்கட்கிழமை சீனாவின் சின்ஹுவா செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிலாளர்கள் நிலத்துக்கடியில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர்களுக்கான மருந்துகள், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்யப்பட்டன. இதுவே, அவர்களில் பலர் உயிர் பிழைக்கக் காரணமாக இருந்தது. மீட்புப் பணியில் 600 மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
சீனாவின் சுரங்கங்கள் பல உலகின் மிக மோசமான ஆபத்துள்ளவையாக உள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் சுரங்கம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி 573 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய சுரங்க பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.