உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 10 கோடியைக் கடந்து பதிவாகியுள்ளது.
இன்று உலகம் முழுவதும் பதிவான தொற்று நோயாளர்களுடன் இதுவரை மொத்தம் 10 கோடி 2 இலட்சத்து 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியதை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி இதனை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அத்துடன் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
கொரோனா உலகப் பெரும் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்தில் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடி என்ற இமாலய இலக்கத்தைக் கடந்துள்ளது.
அத்துடன் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 மில்லியன்களைக் கடந்து 21 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 2 கோடி 58 இலட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 4 இலட்சத்து 31 ஆயிரத்தக்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடி 22 இலட்சத்து 55 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகப் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு சா்வதேச அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டபோதும் இந்தத் தொற்று நோய் தொடர்ந்தும் அதி வீரியத்துடன் பரவி வருகிறது.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவின் புதிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டு வருவது மேலும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்