இந்திய மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் பொலிஸாரின் தாக்குதலில் நேற்று கொல்லப்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144-ஆவது பிரிவின் பிரகாரம் பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு மேலானோர் பொது இடத்திலோ, மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியிலோ கூடுவது குற்றமாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு டெல்லியில் அமுலில் இருக்கும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மத்திய அரசின் விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸாரின் தடியடி, கடும் குளிர் என எதனையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்திய குடியரசு தினமான நேற்று டெல்லியை நோக்கி பிரம்மாண்ட உளவியந்திர பேரணி நடத்தப்பட்டது.
நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான உளவியந்திரங்களில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயற்சித்தனர்.
இதன்போது தடுப்புகளை போட்டு பொலிஸார் விவசாயிகளை மறித்தனர். விவசாயிகளைக் கலைக்க அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. எனினும் பொலிஸாரின் தடுப்புக்களை மீறி விவசாயிகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்தனர்.
இதன்போது இடம்பெற்ற பொலிஸாரின் தாக்குதலின்போதே விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதேவேளை, விவசாயிகளின் போராட்டத்தை முடக்கும் நோக்கில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் திட்டமிட்டே கலவரம் தூண்டிவிடப்பட்டதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டத்தின்போது சில வன்முறையாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களே வன்முறையைத் தூண்டினர். விவசாயிகளின் போராட்டம் அமைதியாகவே நடைபெற்று வரும் நிலையில் இதனைச் சீர்குலைக்கும் சதியாகவே வன்முறை தூண்டப்பட்டது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அமைதியான வழியில் தங்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய விவசாயிகள் அறிவித்துள்ளனர்.