இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி 19 மற்றும் 20 –ஆம் திகதிகளில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் தான் கலந்துகொள்ளவில்லை என தொற்று உறுதி செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சா் அருந்திக பெர்னாண்டோ கூறினார்.
ஜனவரி 15 -ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அமைச்சா் அருந்திக பெர்னாண்டோ வுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் நேற்று அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த மாதத்தில் இவருடன் அடுத்தடுத்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கிட்டத்தட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் முதன்முதலில் தயாசிறி ஜெயசேகர எம்.பிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவா நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, பொதுஜன பெரமுன எம்.பி. வசந்தா யப்ப பண்டார ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வெளியேறினர்.ஏனையோர் கொரோனா சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை