சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் விடுவிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாவை சசிகலா அபராதமாகச் செலுத்தியதால் சிறையில் இருந்த நாட்களைக் கணக்கிட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பெப்ரவரி முதல் வாரத்திலேயே சசிகலா தமிழகம் திரும்புவார் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
சிறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20-ஆம் திகதி பெங்களூரு - விக்டோரியா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தீா்ப்பு வெளியாக முன்னரே ஜெயலலிதா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பலகோடி ரூபாக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சசிகலா விடுவிக்கப்பட்டதை அடுத்து அவருடன் தண்டனை பெற்ற ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.