இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவ வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46-ஆவது கூட்டத் தொடரில் இந்தியா அழுத்தம் கொழுக்க வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திரவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.கே. ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அத்துடன், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான் 13-ஆவது திருத்தத் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் தி.மு.க. தலைவர் எம்.கே. ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 40/1 தீர்மானத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை .
1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கும் வகையிலேயே இலங்கையில் மாறி-மாறி வரும் ஒவ்வொரு அரசுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என இலங்கை தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தில் தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திட வேண்டும்.
இலங்கையில் 13 -ஆவது திருத்தத்தச் சட்டத்தை செயற்படுத்த தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது - உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.