துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், அது அரசுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, துறைமுகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் சுசந்த, இது குறித்து தெரிவிக்கையில்,
"துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுக அதிகார சபைக்கும், அரசுக்கும் பாரிய அளவிலான நட்டம் ஏற்படப்போகின்றது.
இதற்கு நாம் பொறுப்பல்ல. அரசே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நாடு கடனில் நெருக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நட்டத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை அரசு எடுப்பதன் காரணமாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச எம்முடன் கலந்துரையாட இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று காலை 10 மணிக்கு பிரதமரை நாம் சந்தித்துப் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இந்தப் பேச்சில் எமக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முற்றுமுழுதாக துறைமுக அதிகார சபைக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
ஆனால், அதற்கு இணக்கம் எட்டப்படவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு