அமெரிக்காவின் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 1 முதல் அம்மாத இறுதி வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் மொத்தம் 100,317 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 4 இலட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் முதல் கொரோனா மரணம் 2020, பெப்ரவரி -29 அன்று வொஷிங்டனில் பதிவானது.
தொடர்ந்து உலகில் கொரோனாவால் மிக மோகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்க உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 2 கோடி 70 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொற்றுக்குள்ளானவர்களின் உண்மையான தொகை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜனவரி நடுப்பகுதி வரை அமெரிக்காவில் உண்மையில் 8 கோடி 31 இலட்சம் பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) மதிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு நாளில மட்டும் 1 இலட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தடுப்பூசி பணிகளை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும், மொடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடை கால இறுதிக்குள் 30 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா