"ஜனாதிபதி கோட்டாயய ராஜபக்ச அண்மைக்காலமாக மக்களின் நகைப்புக்குள்ளாகி வருகின்றார். உண்மையில் நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு அவர் தகுதிவாய்ந்தவரல்லர். மாறாக இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தினருக்கும் கட்டளையிடுவதற்குமே பொருத்தமானவர்."
- இவ்வாறு தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு பல்வேறு தரப்பினரையும் அழைத்து, அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தது.
பின்னர் அது குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும் ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்தார். அதன் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டு சில நாட்களுக்குள்ளாகவே, ஜனாதிபதி மேலுமொரு அதி விசேட ஆணைக்குழுவை நியமித்தார்.
இவ்வாறான ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
உண்மைகளைக் கண்டறிவதற்கும், சில வேளைகளில் உண்மைகளை மறைப்பதற்கும் இத்தகைய ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுகின்றமை வழக்கமாகும்.
ஆணைக்குழுவை நியமிக்கின்ற ஜனாதிபதிகளின் செயற்பாடுகளின் விளைவாக, ஆணைக்குழு என்றாலே மக்கள் நகைக்கும் நிலையொன்று உருவாகியிருக்கின்றது.
அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாயய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும் மக்களின் நகைப்புக்குரிய ஒன்றாகவே மாறியிருக்கின்றது" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை