வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்,தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து சென்று திருகோணமலையினைச் சென்றடைந்தது.
நேற்று(3) காலை 10.00 மணியளவில் பொத்துவில் நகரில் ஆரம்பமான மேற்படி போராட்டமானது நேற்று மாலை மட்டக்களப்பினை சென்றடைந்தது.
நேற்று பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை,நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.
இந்த பேரணியானது பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை அடைந்தது.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, பயங்கரவாத தடைச் சட்டம் ,சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தன.
இந்த பேரணியானது தாழங்குடாவில் இருந்து ஆரம்பமானது.
ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக சென்ற நிலையில் காத்தான்குடியில் பெருமளவான முஸ்லிம்களும் இந்த போராடத்தில் இணைந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் உட்பட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கடத்தப்பட்ட எமது பிள்ளைகளை மீட்டுக்கொடு சர்வதேசமே என்ற கோரிக்கையுடன் இன்றைய பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் பெரும் எழுச்சியுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் பெருமளவான வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பேரணியானது திருகோணமலை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டும், படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்து மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஜோசப்பரராஜசிங்கத்திற்கு நீதியைப்பெற்றுக்கொடு போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதிக்கு சென்றபோதுஅங்கு பெருமளவான முஸ்லிம்கள் பங்குகொண்டு வரவேற்பளித்ததுடன் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.
ஓட்டமாவடியில் முன்னாள் அமைச்சர் அமீர்அலி தலைமையிலானோர் அணிதிரண்டு ஆதரவு வழங்கினர்.
அத்துடன் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு முஸ்லிம்கள் குடிநீர் மற்றும் குளிர்பானம் வழங்கி ஆதரவு வழங்கியதையும் காணமுடிந்தது என்று அருவியின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய பேரணியின்போது முஸ்லிம்களின் ஜனாசா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.
இந்த பேரணியை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வுத்துறையினரும் பேரணியை கண்காணித்ததையும் காணமுடிந்தது என்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை