வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மேலும் நீடிக்க ஒன்ராறியோ மாகாண அரசங்கம் ஆலோசித்து வருகின்ற அதேவேளை, வணிகச் செயற்பாடுகளை அடுத்து வாரம் முதல் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்க அனுமதிக்கவுள்ளதாக அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையை சந்தித்து மாகாணத்தில் கோவிட்19 தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து விவாதித்தார்.
இந்நிலையில் மாகாணம் எடுக்கவுள்ள அடுத்துகட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை உத்தியோகபூா்வ அறிவிப்புக்களை அவர் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாட்டில் பெரும்பகுதிகளில் குறைந்தது பெப்ரவரி 16 வரையேனும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன், ரொரண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் யார்க் பிராந்தியங்களில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை பிப்ரவரி 22 வரை நீடிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இவை குறித்த உத்தியோகபூா்வ அறிவித்தல்களை முதல்வர் போர்ட் திங்கட்கிழமையே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் ஒன்ராறியோவில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் வணிகச் செயற்பாடுகளை படிப்படியாக மீளத் திறக்க அனுமதிக்கப்படலாம் என கனேடிய பிரஸ் வெள்ளிக்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் மீண்டும் திறக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பாதிப்பு அதிகமானால் அந்தப் பகுதியை உடனடியாக மூடும் திட்டங்களையும் அரசாங்கம் கொண்டுள்ளது.
ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைவாக உள்ள 4 பிராந்தியங்களில் வணிகச் செயற்பாடுகள் முதலில் மீளத் திறக்கப்படும்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவு, கிங்ஸ்டன், ஃபிரான்டெனாக், லெனாக்ஸ் மற்றும் ஆடிங்டன், ரென்ஃப்ரூ கவுண்டி மற்றும் டிமிஸ்கேமிங் ஆகிய பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை குறியீடு தளர்த்தப்பட்டு, புதன்கிழமை பசுமை மண்டலத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் இந்தப் பகுதிகளில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மீண்டும் திறக்க முடியும்.
அத்துடன், பெப்ரவரி இரண்டாம் வாரத்தின் பின்னர் கிரேட்டர் ரொராண்டோ பகுதியில் உள்ள மூன்று தீவிர தொற்று பரவல் மையங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து பெப்ரவரி 3-ஆம் வாரத்தில் ரொரண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தொற்று நோய் நிலைமையப் பொறுத்த இந்தத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என மாகாண அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஒன்ராறியோவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு முன்னர் தினசரி தொற்று நோயாளர் தொகை ஆயிரத்துக்கு குறைய வேண்டும் அத்துடன், மருத்துவமனையில் உள்ள தொற்று நோயாளர் தொகை 150-க்கு குறையவேண்டும் என விரும்புதாக மாகாண தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒன்ராறியோவில் ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த அவசரகால நிலை பெப்ரவரி -9 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இதனை மேலும் நீடிக்கும் திட்டம் அரசிடம் இல்லை எனவும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோவில் சமூக முடக்கல் அமுல் செய்யப்பட்டதிலிருந்து அங்கு தொற்று நோயாளர் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும் கொரோனா புதிய பிறழ்வுகள் கண்டறியப்படுவது கவலைஅளிககிறது என பொது சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒன்ராறியோவில் நேற்று வெள்ளிக்கிழமை 1,670 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ