உலகெங்கும் இடம்பெறும் அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையில் மீண்டும் இணையவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் இந்தத் தீா்மானம் குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியுறவுச் செயலாளர் வெளியிடவுள்ளதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 2018-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் 3 வருடங்களின் பின்னர் பேரவையில் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் பைடன் மாற்றங்களைச் செய்துவருகிறார். அவ்வாறான மாற்றங்களில் ஒன்றாக அமெரிக்கா மீண்டும் மனித உரிமைகள் பேரவையில் இணையவுள்ளது.
ஏற்கனவே பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாகவும், உலக சுகாதார அமைப்புக்கான நிதியுதவியை மீண்டும் வழங்கவுள்ளதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா. மனித உரமை பேரவையில் மீண்டும் இணையும் அறிவிப்பை அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் இன்று திங்களன்று அறிவிப்பார் என்று வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸூக்குத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையை சீர்திருத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த வழி அதனுடன் கொள்கை ரீதியாக இணைந்து பயணிப்பதே என்பதால் மீண்டும் பேரவையுடன் இணைந்து செயற்பட உத்தேசித்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த ஆண்டு வாக்களிக்காத உறுப்பினராக பேரவைக்குள் சென்று, 2022-க்குள் முழு உறுப்பினராக இடம்பெற அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைக் பேரவையின் அடுத்த அமர்வு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.