அமெரிக்க காங்கிரஸ் கட்டத்தொகுதிக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் ட்ரம்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை செனட் சபையில் ஆரம்பமாகிறது.
ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள காங்கிரஸ் கட்டத்தொகுதிக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையைத் தூண்டிவிட்டதாக ட்ரம்புக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் கலகக்காரர்கள் சுயாதீனமாகவே செயற்பட்டனர். அவர்களை யாரும் துண்டிவிடவில்லை என ட்ரம்ப் தரப்பினர் வாதிட்டுவருகின்றனர். ஆனால், ட்ரம்ப் குற்றமிழைத்தமைக்கான போதிய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.
இதேவேளை, ட்ரம்புக்கு எதிரான இந்த நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் அரசியல் நாடகம் என ட்ரம்ப் வழக்குரைஞா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
ட்ரம்ப் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த தங்கள் தரப்பு முதல் கட்ட வாதத்தை அவரது வழக்குரைஞா்கள் செனட் அவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
அதில் ஜனாதிபதித் தோ்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்த ட்ரம்ப், அவருக்கான சட்ட உரிமைகள்படியே நடந்துகொண்டார். அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தின் கீழ் அவருக்கு முழு கருத்து சுதந்திரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் போராட்டக்காரா்கள் நடத்திய கலவரத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது என ட்ரம்ப் வழக்குரைஞர்கள் கூறினர்.
அத்துடன், ட்ரம்ப் இப்போது ஜனாதிபதி பதவியில் இல்லாத நிலையில், அவா் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் சபை விசாரிப்பது சட்ட விரோதம் எனவும் அவர்கள் வாதிட்டனர்.
ஜனநாயக கட்சியினரும் பிரதிநிதிகள் சபைத் தலைவரும் தேசத்தின் நலனில் கவனம் செலுத்துவதை விடுத்து அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் ட்ரம்ப் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.
இதேவேளை, அமெரிக்க செனட் சபையில் இடம்பெறும் விசாரணைகளில் ட்ரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம்.
ஆனால் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவளித்தால் மட்டுமே ட்ரம்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். செனட்டில் ஜனநாயகக் கட்சியினர் 50 இடங்களைக் கொண்டுள்ளனர், குடியரசுக் கட்சியினர் அவர்களுடன் சேர்ந்தால் மட்டுமே நடவடிக்கை சாத்தியமாகும். எனினும் அவர்கள் அவ்வாறு இணைவதற்கான அறிகுறிகளையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.