சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான விமான நிலையம் மீது நேற்று யேமன்-ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
சவுதியின் தென் மேற்கு பகுதியில் யேமன் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஆஸிம் மாநிலத்தில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில் இந்தக் தாக்குதலுக்கு யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை ஜனாதிபதி மன்சூருக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் எல்லை நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடராக சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வெளிவிவகார துறை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.