அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 130 வாகனங்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 65 பேர் காயமடைந்தனர்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் போர்ட் வோர்த் நகரில் உள்ள பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டன.
கொள்கலன் லொறிகள் முதல் சிறிய ரக கார்கள் வரை சுமார் 130 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.
டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அதிகாலையில் வீதிகளை மறைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதே விபத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து போர்ட் வோர்த் நகரில் உள்ள பிரதான வீதி மூடப்பட்டு விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீயணைப்பு வீரர்கள் துணையோடு அகற்றப்பட்டன.
இதேவேளை, அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிபொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.