தமிழகம் - விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது நன்பகல் 12 மணியளவில் திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் 60-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. இந்த விபத்தில் 2-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின..
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுமென்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் நிவாரண உதவியாக அளிக்கப்படுமென்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.