அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமையால் அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது.
இதனால் செனட் சபையின் மேலதிக விசாரணை மற்றும் தண்டனையிலிருந்து ட்ரம்ப் தப்பியுள்ளார்.
கடந்த ஜனவரி 6-ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் தலைமையகத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 5 போ் பலியாகினர். இந்த வன்முறையை ட்ரம்ப் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைக் கண்டித்து ட்ரம்புக்கு எதிராக செனட் சபையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் இடம்பெற்று நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 57 செனட் உறுப்பினர்கள் ட்ரம்பை தண்டிக்க ஆதரவாகவும் 43 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.
ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் தேவையான 67 வாக்குகள் கிடைக்காததால் இந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது.
இந்தக் கண்டனத் தீர்மானம் நிறைவேறியிருந்தால் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அமெரிக்க செனட் சபை தடை விதித்திருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் கண்டனத் தீா்மானம் தோல்வியடைந்தாலும் இந்த வன்முறை தொடர்பில் நீதிமன்றத்தில் ட்ரம்ப் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கானல் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் எதிலிருந்தும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்காவில் குற்றவியல் நீதி அமைப்பு இருக்கிறது. அதே போல சிவில் வழக்குகளும் தொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.