Saturday 20th of April 2024 06:03:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
நெல் காய வைக்க இடவசதி கோரும் விவசாயிகள்!

நெல் காய வைக்க இடவசதி கோரும் விவசாயிகள்!


வவுணதீவு கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக காணப்படுவதுடன், வெள்ளத்தில் பாதிப்படைந்ததால் நெல்களை காயவைப்பதில்; பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வயல் பிரதேசங்களில் வெள்ள நீர் உள்ளதால் வேளான்மை நீரில் மூழ்கியது, இதனை அறுவடை செய்யப்பட்ட போது பாரிய நெல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், நெல்கள் ஈரப்பதனுடன் பெறப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இம்முறை அறுவடையின் போது விளைச்சல் குறைவாகவே காணப்படுவதாகவும், அதனால் பாரிய நஸ்டம் ஏற்படுவதாகவும், நெல் ஈரப்பதனாக இருப்பதால் விற்பனை செய்யும் போது அதனை காரணம் காட்டி நெல்லின் விலையை வியாபாரிகள் குறைக்கின்றனர் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தினால் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது நெல் உலர்ந்த நிலையில் இருந்தால் அரசாங்கம் நல்ல விலைக்கு வாங்குவார்கள் என்கின்றனர். ஆனால் எங்கள் பிரதேசத்தில் நெல் காய வைப்பதற்கு இடம் இல்லாத காரணத்தினால் வீதிகளில் மாத்திரமே நெல்களை காயவைக்க முடியும்.

ஆனால் வீதிகளில் நெல்லினை காய வைக்கும்; போது வாகனங்கள் செல்வதால் நெல்களில் பாரிய சேதங்கள் காணப்படுகின்றது. வயல் அறுவடை செய்த நிலையில் பாரிய நஷ்டங்களுடன் மீதியாக உள்ள நெல்லை கொண்டு வந்து காய வைத்தால் அதுவும் இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது.

எங்களுக்கு நெல்லினை காய வைப்பதற்கு முறையான இடம் இல்லாத காரணத்தினாலேயே வீதியில் காய வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு காணப்படுகின்றோம். இயற்கை அழிவுகளில் இருந்து பாதிக்கப்பட்டு மீதப்பட்ட நெல்களை காய வைப்பதற்கு ஒரு நிரந்தர இடம் ஒன்றிணை அரசாங்கம் ஒழுங்கமைத்து தரும் பட்சத்தில் எங்களுக்கு பாரியதொரு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் நெல்களை காய வைப்பதற்கு ஏற்ற இடத்தினை வழங்குமாறு கோரும் கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

பெரும்போகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 ஆயிரத்தி 346 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 11 ஆயிரத்தி 938 விவசாயிகளினது வயல் நிலங்களான 10 ஆயிரத்தி 412.5 ஹெக்டேயர் நெற்செய்கை அழிவுற்றுள்ளது. இதுதவிர மீதமுள்ள 65 ஆயிரத்தி 933.5 ஹெக்டேயர் விவசாய நிலத்தில் கிடைக்கப்பெற்ற நெல் விளைச்சல்களில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE