அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஜி-07 நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மெய்நிகா் வழியில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கொரோனா வைரஸ் தொற்று, உலகப் பொருளாதார நிலை மற்றும் சீனாவைக் கையாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகப் பேசப்படவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் உலக செல்வந்த நாடுகளில் கூட்டமைப்பான ஜ-07 நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
உலகின் 7 பெரும் ஜனநாயக, பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களுடனான இந்தக் கலந்துரையாடல் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க ஜோ பைடனுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
கோவிட்19 தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான சர்வதேச நடவடிக்கைள், சுகாதார-பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கும் தொற்று நோய்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பைடன் தனது இதன்போது முக்கியமாக விவாதிக்கவுள்ளார்.
ஜனவரி 20 அன்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றது முதல் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 4 ஆண்டுகளாகப் பேணிவந்த வெளியுறவுக் கொள்ளைகளில் ஜோ பைடன் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் மீண்டும் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா வெளியேறியது.
எனினும் பைடன் பதவியேற்றதும் பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டார். உலக சுகாதார அமைப்பில் அமெரிக்க மீண்டும் இணையும் என அறிவித்தார்.
சீனாவை எதிர்கொள்வது உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தையும் பைடன் வெளியிட்டுள்ளார்.
இதன் ஒரு அங்கமாகவே ஜ-7 நாடுகளுடனான அவரது சந்திப்பு அமையவுள்ளது.