கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள புலம்பெயர் சமூகத்தினர் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் குடியேற்றவாசிகள் மத்தியில் கோவிட் 19 தொற்று நோயின் தாக்கம் என்ற தலைப்பில் மெய்நிகர் சமூக உரையாடல் வழி நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட்19 தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் புலம்பெயர்ந்தவர்கள் ஏனையோரை விட அதிக கஷ்டங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து, சுகாதார சேவைக்களை பெற்றுக்கொள்வது போன்றவற்றில் அவர்கள் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அத்துடன், இனவெறி, பாகுபாடு போன்றவற்றையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனவெறி மற்றும் பாகுபாடு காரணமாக புலம்பெயர் சமூகங்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதன் விளைவாக, பல புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு பணிகள், குழந்தை பராமரிப்பு தொழில் துறைகளிலேயே அதிகம் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான பலர் கார் வாங்கவோ அல்லது வாடகைக் கார் போன்ற தனிப்பட்ட போக்குவரத்தைப் பயன்படுத்தவோ முடியாதளவுக்கு அவர்களின் பொருளாதார நிலை உள்ளது. இதன் விளைவாக அவர்கள் அதிகம் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ளனர். இதனால் அவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் உள்ள புலம்பெயர் ந்தோர் அதிக நெரிசலான வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் ஒரு வீட்டில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டால் மற்றவர்கள் சமூக இடைவெளி பேணுவது கடினமாகும்.
புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் சர்வதேச மாணவர்கள், அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்களின் குடியேற்ற நிலை நிச்சயமற்றதாக உள்ளது. இதனால் வேலைகளில் அவா்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கின்றனர். எனினும் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியாதவர்களாக உள்ளனர். முறைப்பாடு செய்தால் வேலை இழக்க நேரிடும் என்று அவா்கள் அஞ்சுகிறார்கள் எனவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.