அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சு அலுவலகம் ஒன்றில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் அங்கு பணியாற்றும் இளம் பெண் பணியாளர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பிரதமர் ஸ்கொட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தனது வேலை பறிபோகும் என்று அஞ்சியதாக கூறும் பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இதுதொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
26 வயதாகும் பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற பெண் தன் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விபரித்தார். இது அவுஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஹிக்கின்ஸின் புகார் உரிய முறையில் கையாளப்படாமை தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அத்துடன், இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மீண்டும் துரித கதியில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கவே கூடாது. நாடாளுமன்றத்தில் பணிபுரியும் எந்தவொரு இளம் பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா