அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
இதனால் பேஸ்புக் ஊடாக செய்தித் தளங்களுக்குள் பிரவேசித்து செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளை பகிர்தல் போன்ற சேவைகளை அவுஸ்திரேலியர்கள் இனி பெற முடியாது.
இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் பேஸ்புக் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தடை மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ளவர்களும் பேஸ்புக் மூலம் அவுஸ்திரேலியா தொடர்பான செய்திகளை அணுக முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்ட புதிய ஊடக சட்டம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரவுக்கும் பேஸ்புக் நிறுவனத்துக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து இந்தத் தடை அமுலாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.
இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா