கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொற்று நோயுடன் போராடும் முழு உலகுக்குமான எச்சரிக்கை என உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2020-ஆம் ஆண்டு ஜப்பானில் அதிக தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
ஜப்பானிய ஆண்கள் தற்கொலை செய்துகொள்ளும் வீதம் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்தாலும் பெண்கள் தற்கொலை வீதம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 15 வீதத்தால் உயர்ந்துள்ளது.
2019-ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஒக்டோபர் மாதம் ஜப்பானில் பெண்கள் தற்கொலை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் 879 பெண்கள் ஜப்பானில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அல்லது 1990 களின் முற்பகுதியில் ஜப்பானின் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவுகள் போன்ற தாக்கங்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆண்கள் மத்தியில் உணரப்பட்டது. இந்தக் காரணிகளால் அப்போது ஆண் தற்கொலை விகிதங்களில் அதிகரித்துக் காணப்பட்டன.
ஆனால் இப்போது கோவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் இள வயது ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே அதிக தற்கொலை மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஜப்பானில் கடந்த செப்ரெம்பர் 27-ஆம் திகதி நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் 207 பெண்களின் தற்கொலை மரணங்கள் பதிவாகின.
பிரபலங்களின் தற்கொலைகளுக்கும், அடுத்தடுத்த நாட்களில் தற்கொலைகள் சடுதியாக அதிகரிப்பதற்கும் இடையே மிகவும் வலுவான தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிரபலம் தற்கொலை செய்துகொண்டால் அது குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட அவ்வாறான எண்ணம் கொண்டுள்ளவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி தற்கொலைக்குத் தூண்டுகிறது எனவும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்