தாலிபான் தீவிரவாதியால் பாகிஸ்தானில் வைத்து 9 ஆண்டுகளுக்கு முன் சுடப்பட்டு படுகாயங்களுடன் தப்பிய இளம் பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு சமூக ஊடக வலைத்தளமான ருவிட்டர் ஊடாக தீவிரவாதிகள் மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
2012ம் ஆண்டு பாகிஸ்தானின் 'ஸ்வாட்' பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான அப்போது 14 வயதாக இருந்த மலாலாவை சுட்டுக்கொல்ல தாலிபான் தீவிரவாதிகள் முயன்றனர்.
தலையில் குண்டு பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மலாலா பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
மலாலாவைச் சுட்ட இஸானுல்லா என்ற தீவிரவாதி கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் இருந்து தப்பித்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தீவிரவாதி இஸானுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் மலாலா மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும். மலாலாவுடனும் அவரது தந்தை உடனும் தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று நிலுவையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை நிச்சயமாக எங்களது குறி தப்பாது என்றும் பகீரங்கமாக அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலாலா, ஏராளாமான கொலை வழக்குகளில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளி சிறையில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கொலை மிரட்டலை அடுத்து தீவிரவாதி இஸானுல்லாவின் ருவிட்டர் பக்கங்களை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது.
எனினும் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ட்விட்டர் பக்கம் போலியானது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. தீவிரவாதியின் தாக்குதலுக்கு பிறகு பிரிட்டன் அரசு அடைக்கலம் அளித்ததை அடுத்து தற்போது மலாலா லண்டனில் வசித்து வருகிறார். பெண் சுதந்திரம், பெண் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி குறித்து மலாலா உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.