புளொக்கர்கள் மற்றும் வெய்போ உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கட்டுரைகளை எழுதி வெளியிடும் எழுத்தாளர்களுக்கு சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ளன.
பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிளொக்கர்கள் உள்ளிட்ட வலைத்தளங்களில் எழுதுவதாயின் அவற்றை அரசிடம் பதிவு செய்து அதற்கான ஒப்புதல் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒப்புதல் பெறாமல் நடத்தப்படும் வலைத்தளங்கள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, அதில் எழுதுவோர் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்கனவே, ஊடகங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. பெரும்பாலும் அரசு சார்பு ஊடகங்களே அங்கு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் எழுத்தாளர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சீன அரசின் புதிய நடவடிக்கைக்கு இணையவழி கட்டுரையாளா்கள் பலா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
சீன அரசு சாா்பில் இயங்கும் ஊடகங்களில் மட்டுமே அந்நாடு தொடா்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
அரசியல், இராணுவம், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் இணையவழியில் கட்டுரைகளை எழுதுவதற்கு சீன அரசு கடந்த 2017-ஆண்டிலேயே கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், அக்கட்டுப்பாடுகள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.