ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பேரவையில் சக்திவாய்ந்த உறுப்பு நாடாக இருக்கும் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் மௌனமாக இருந்து வருவதாக கனேடிய தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அந்நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பரிந்துரையை கனடா முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கனடாவில் நேற்று தமிழர்கள் பெரும் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ரொரண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து பல நூற்றுக்காணக்கான வாகனங்கள் ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கிய நேற்று புதன்கிழமை அணிவகுத்துச் சென்றன.
கனடா நினைத்தால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என இந்தப் பேரணி அமைப்பாளர்களின் ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிர்வாகம் கனேடியத் தமிழர்களின் ஒன்றுபட்ட கோரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போகிறதா? இல்லை பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்து, தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்குப் பரிந்துரைக்காமல் காப்பாற்றப்போகிறதா? என்பதை பொறித்திருந்து நாங்கள் பார்க்கவுள்ளோம் எனவும் அவா் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் கடந்த ஜனவரி 12-ஆம் திகதியிட்ட தனது அறிக்கையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பரிந்துரைப்பது குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார் எனவும் பேரணி அமைப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அத்துடன், பேரணியில் பங்கேற்றவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இடம்பெற்ற கெடூரங்களைப் பட்டியலிட்டதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரிந்துரைக்க வேண்டியதன் நியாயத்தன்மையையும் வலியுறுத்தியுள்ளனர்.