முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் காதர் மஸ்தான் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இந்நடப்பு ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி A. லதுமீராவின் நெறிப்படுத்தலோடு (18.02.2021) துணுக்காய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இதில் அடைக்கலநாதன் வினோ நோகராதலிங்கம் ரவிகரன் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்தில் மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீட்டுத்திட்டம் சம்பந்தமாகவும், விவசாயம், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி (RDA),(RDD) , உள்ளூராட்சி மன்றங்கள், நீர் விநியோகம், மின் இணைப்பு போன்ற விடயங்கள் உள்ளடங்கலாக வனவளம், வன ஜீவராசிகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் சென்றமுறை இடம்பெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் நீண்ட நேர கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், அவசரமாக செய்ய வேண்டிய வீதிகளை உடனடியாக செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த சபையில் அபிவிருத்தி குழுத் தலைவர் காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. செல்வம் அடைக்கலநாதன், கௌரவ. வினோ நோகரதலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு