இந்திய – சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய-சீன இராணுவத்தினர் ஆயுதங்களின்றி மோதிக்கொண்டதில் தனது தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதை சீனா முதல் தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த ஜூன் 15-ஆம் திகதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலில் 4 சீன இராணுவத்தினர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர். சீன இராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தன. எனினும் தனது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் சீனா மௌனம் காத்தது.
இந்நிலையில், சீனாவில் பி.எல்.ஏ. டெய்லி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூன் 15-ஆம் திகதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 4 சீன இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென் ஹோங்ஜுன், ஸியான்க்ராங், ஸியோ சியுவான், வாங் ஜூரோன் ஆகிய சீனப் படையினர் இறுதிமூச்சு வரை போராடி இறந்தனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு தமக்கே சொந்தமானது. அங்கு எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய இராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் செற்படுவதாக சீனா தெரிவித்து வருகிறது.
ஆனால், இந்தியத் தரப்பு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால் இந்திய- சீன எல்லைப் பகுதியான லடாக்கில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.