மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது இராணுவத்தினரால் சுடப்பட்டு காயமடைந்த இளம் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தமை தொடர்பில் அமெரிக்க கவலை வெளியிட்டுள்ளது.
ஜனநாயக வழியில் போராடுவோருக்கு எதிரான இராணுவம் தனது சக்தியைப் பயன்படுத்துவதை தாம் கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 9-ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான மியா த்வேட் த்வேட் கைங் படுகாயமடைந்தார்.
கடந்த 10 நாட்களாக உயிர்காப்பு கருவிகளின் உதவியுடன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இப்பெண் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இந்தப் பெண்ணின் மரணம் போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. அத்துடன், மியான்மர் இராணுவம் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.