தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூகங்கள் ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஊடக மையத்தில் இன்று (21-02-2021)நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டுவர தமிழ் தேசிய கட்சிகள் சிவில் சமூகங்கள் ஒன்றுபட வேண்டும்
சிறீலங்கா தொடர்பில் சர்வதேச சமூகத்தால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தீர்மானத்தில் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் சில முக்கிய விடையங்களில் முன்னேற்றம் காணப்படவில்லை.தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முன்னேற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்பதை ஆராய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் தலைவர்கள், மத குருக்கள், பல்கலைக்கழக மாணவர் சமுகம், அரசியல் ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் சங்கங்கள், ஒன்று கூடி பொது நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய நிலையில் உள்ளோம்.
ஐ.நா மனித உரிமை பேரவை முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர்களை ஒரு தேசமாக அடையாளப்படுத்த தவறியமை தமிழ் மக்களை பொறுத்தவரையில் சர்வதேச நீதி தொடர்பிலும், மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்த கூடியவாறு அமைந்துள்ளது அதில் மாற்றத்தினை கொண்டுவரவேண்டும்
சர்வதேச சமூகத்திடம் இருந்து தீர்க்கமான நீதியான முடிவு எடுக்கவேண்டிய தேவையும் கடப்பாட்டிலும் தமிழர்கள் உள்ளோம். இதனை தாங்கள் அனைவரும் அறிந்தீர்கள் அது தொடர்பில் சிந்தித்தீர்கள் செயற்பட்டீர்கள் என்பது அறிந்த விடயம் .
ஆனாலும் தங்களால் ஐ.நா மனித உரிமை பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்னும் சில விடையங்களை குறிப்பிட்டு மிகவும் ஒரு பலம் பொருந்திய வரைபாக மாற்றி முன்னர் கையொம்பம் இடாதவர்களையும் ஒன்றிணைத்து குறுகிய நாளைக்குள் வரைபை அனுப்பிவைக்க தாங்கள் அனைவரும் முன்வருவீர்கள் என நாம் நம்புகின்றோம்;
ஐ.நா மனித உரிமை பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தால் இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் இருந்த போதும் அது தொடர்பில் தாங்கள் முன்னேற்றகரமான நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் தாங்கள் வலுவான தீர்மானம் எடுப்பதற்கு தங்களை அழைக்கின்றோம்
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள செல்லா விருந்தினர் விடுதி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 24-02-2021 காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், கிளிநொச்சி