ஸ்பெயினில் பிரபல ராப் இசைப் பாடகர் பாப்லோ ஹசேல் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த நாட்டில் தொடர்ந்து பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆளும் கூட்டணியில் இந்த விவகாரம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் அமைந்துள்ளன.
காட்டலோனியா பிராந்தியத்தைச் சேர்ந்த ராப் இசை பாடகரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான பாப்லா ஹசேல், தனது படைப்புகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருபவர். இதன் காரணமாக ஸ்பெயின் அதிகாரிகள் அவர் மீது எடுக்கும் நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில், நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தது, ஸ்பெயின் அரச குடும்பத்தை அவமதித்தது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கடந்த 16-ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, காடலோனியா உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து இன்று 5ஆவது நாளாக ஆா்ப்பாட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்டலோனியாவின் பாசிலோனியா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மீது போத்தல்கள், கற்கள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருள்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கும் தீவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்பெயினில் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டு பிரதமர் பெட்ரோ சான்ஷெஸ் அறிவித்துள்ளார்.