தமிழர்களின் கைகளில் ஆட்சி, அதிகாரம் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு உருவாக்கக் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளை நேற்று கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். எனினும் பெரும்பான்மையினத்தவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ் மக்களுக்கும் சமளவான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்