உலகில் பல ஏழ்மையான நாடுகள் இதுவரை ஒரு தடுப்பூசியைக் கூட பெறாத நிலையில் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களது தடுப்பூசிகளை உலகில் அனைவருடனும் பகிர்வதற்கான கடமையை சிறப்பாகச் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் பொது தடுப்பூசித் திட்டச் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
சுமார் 336 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா-ஒக்ஸ்போர்டு தடுப்பூசிகள் மற்றும் 1.2 மில்லியன் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை இந்த மாத இறுதியில் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் முதல் 100 நாட்களுக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள முன்கள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன். இதில் நாங்கள் முன்னேறியுள்ளோம். இந்த இலக்கில் கிட்டத்தட்ட 50 வீதத்தை அடைய முடியும் எனக் கருதப்படுகிறது. எனினும் முழு இலக்கை அடைய இன்றும் உறுதியான நடவடிக்கை தேவை எனவும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலகின் 130 நாடுகள் இன்னும் ஒரு கொரோனா தடுப்பூசியைக் கூடப் பெறவில்லை என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கவலை தெரிவித்துள்ளார். உலகின் 10 நாடுகளில் மட்டும் 75 சதவீதமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி விநியோகத்தில் நியாயமான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது நியாயமான நடவடிக்கை அல்ல. அனைவரும் பாதுகாப்பான நிலையை அடையாத பட்சத்தில் நம்மில் எவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என குடரெஸ் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்