மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நேற்று முதல் அந்நாட்டு இராணுவத்தின் உத்தியோகபூா்வ பேஸ்புக்பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் டாட்மாடா (tatmadaw) என்ற இராணுவத்தின் உத்தியோகபூா்வ பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
எங்களின் சர்வதேச கொள்கைகளுக்கு ஏற்பவே இந்தப் பக்கம் முடக்கப்பட்டது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனை எதிர்த்து அங்கு மக்கள் கடந்த இரு வாரங்களாக போராட்டத்தில் இடபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து 10 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இவற்றுடன் மியான்மர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக போராட்டங்களின்போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.