மெக்ஸிக்கோவின் தென்கிழக்கு மாநிலமான வெராக்ரூஸில் மெக்ஸிக்கன் விமானப்படை விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அந்நாட்டு இராணுவத்தினர் 6 பேர் பலியானதாக மெக்ஸிக்கோ பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எமிலியானோ சபாடா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 மணியளவில் லியர்ஜெட்- 45 விமானம் புறப்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துடன், நேற்று அடுத்தடுத்து 3 விமான விபத்து தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று இயந்திரம் செயலிழந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அபுஜா விமான நிலையத்திற்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளதில் அதிலிருந்த ஏழு பேரும் பலியாகினர்.
அத்துடன், 231 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் அமெரிக்காவின் டென்வா் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொனலுலுவிற்கு சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் யுனைட்டெட் ஏர் போயிங் 777-200 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்தவாறு அவசரமாக நேற்று தரையிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.