அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான முதலாவது ரீ-20 கிரிகெட் போட்டியில் நியூசிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நியூசிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரில் விளையாடுகிறது.
இன்று நடைபெற்ற முதலாவது ரீ-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதிகபட்சமாக டெவோன் கொன்வே ஆட்டமிழக்காது 59 பந்துகளை எதிர்கொண்டு 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் ரிச்சட்சன் மற்றும் சாம்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
185 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலளித்து ஆடிய அவுஸ்ரேலிய அணிக்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தனர். குறிப்பாக நியூசிலாந்தின் இஷ் சோதியின் பந்துவீச்சில் அவுஸ்ரேலிய வீரர்கள் திணறினர்.
அவுஸ்ரேலிய அணியின் ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக மிட்சர் மார்ஷ் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் அவுஸ்ரேலிய அணி 17.3 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பந்துவீச்சில் இஷ் சோதி 4 விக்கெட்டுக்களையும், சௌதி மற்றும் போல்ட் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
ஆட்டநாயகனாக நியூசிலாந்து வீரர் டெவோன் கொன்வே தெரிவு செய்யப்பட்டார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரில் நியூசிலாந்து அணி 1:0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளும் இடையிலான 2வது போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து