அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலியெடுத்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம் என்ற இமாலய இலக்கைக் கடந்தது.
கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டியில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளி உறுதிப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவில் தேசியக் கொடிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் 5 இலட்சத்துக்கு அதிகமானோரின் இழப்பை நாங்கள் நினைவுகூருகிறோம். அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுடன் இணைந்து துயரைப் பகிர்ந்துகொள்கிறோம். ஒரு தேசமாக நாம் அவர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை ஆற்றிய அஞ்சலி உரையில் பைடன் குறிப்பிட்டார்.
கொரோனா மரணங்கள் 5 இலட்சத்தை கடந்ததாக நேற்று உத்தியோகபூா்வ அறிவிப்பு வெளியானதையடுத்து ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோர் கருப்பு ஆடை மற்றும் கருப்பு முககவசங்களை அணிந்து வெள்ளை மாளிகையில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் திங்கட்கிழமை மாலை வரை அமெரிக்காவில் 28 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்19 தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், 500,264 கொரோனா மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
உலகெங்கும் பதிவான மொத்த கொரோனா மரணங்களில் இது 19 வீதமாகும். அதேவேளை, உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் தொகை வெறும் 4 வீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்காவின் கொரோனா மரணங்கள் 5 இலட்சம் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சியடைந்த, பணக்கார நாடான அமெரிக்கா தொற்று நோயைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா