யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு சீனா நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தில் மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் கடுமையாக எதிர்ப்பதாக குறித்த திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இத்துடன் தென்னிந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இந்தத் தீவுகளில் சீன நிறுவனம் கால்பதிப்பது தொடர்பில் பாதுகாப்புக் கவலைகளையும் இந்தியா வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள சினோ சோர் ஹைப்ரிட் (பெய்ஜிங்) டெக்னாலஜி கோ லிமிடெட் இந்த வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை முடிவுடன் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தம் தங்களது சுய பாதுகாப்புக்கு ஆபத்தானது எனத் தெரிவித்து மூன்றாம் தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அத்துடன், இத்திட்டம் தொடர்பில் உண்மைகளுக்கு முரணான தொடர்ச்சியான தவறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எமது நிறுவனம் அறிந்துள்ளது. இது எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதாக அமைகிறது.
இந்த திட்டத்தின் அரசியல்மயமாக்கல் மக்களின் நலன்களுக்கு எதிரானது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்டங்கள்- ஒழுங்கைப் பின்பற்றி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்கும் ஒப்பந்தக்காரரின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒப்பந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன், சர்வதேச ஏல நடைமுறைகளை இந்த விடயத்தில் இலங்கை கண்டிப்பாக பின்பற்றும் என்று நிறுவனம் நம்புகிறது எனவும் சினோ சோர் ஹைப்ரிட் (பெய்ஜிங்) டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: சீனா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்