கொரோனாத் தொற்று காரணமாக மேலும் ஆண்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 450 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (பெப்-23) மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட மூவரில் ஒருவர் நேற்று முன்தினமும் (22), ஒருவர் கடந்த பெப்ரவரி 21 மற்றும் பெப்ரவரி 20 ஆம் திகதிகளில் தலா ஒவ்வொருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட மூவரின் விபரங்கள் வருமாறு,
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவு அதிர்ச்சி, என அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை