ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக 175,000 கனேடிய டொலர் நிதி உதவியை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும்வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இப்புலம்பெயர் தமிழர்கள் தங்கள் மொழியின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் சிறப்புத்தன்மையை நீடித்திருக்க பாடுபட்டு வருகின்றனர். தமிழ் கலாச்சாரத்தை அடுத்து வரும் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரொரண்டோ பல்கலைக்கழகம் மற்றும் அங்குள்ள தமிழ் சமூக அமைப்புக்களிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு தமிழ் இருக்கை தோன்றவுள்ளது.
இவ்விருக்கையைத் தோற்றுவிக்க 3 மில்லியன் டொலர்கள் தேவையானதாகவுள்ளது. இதற்காக 1.04 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
எனவே 3 மில்லியனில் 1.04 மில்லியன் போக எஞ்சிய 1.96 மில்லியன் டொலர் தொகை தேவைப்படுவதாக டொராண்டோ பல்கலைக்கழகத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளதாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனையொட்டியே இந்த நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வழங்க முன்வந்துள்ளது என தமிழக அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.