கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக போக்குவரத்து ஏற்றவகையில் இல்லாமல் பல வீதிகள் வவுனியா மாவட்டத்தில் காணப்பட்டன. இவ்வீதிகளை பயன்படுத்துவதில் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இதன் காரணமாக தங்களது வீதிகளை புனரமைத்து தருமாறு வவுனியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சாலை (Integrated Road Investment Program) திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 271.48 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றுவதற்கான வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் காப்பற் இடும் திட்டம் மூலமாக தற்போது பல கிராமங்களின் உள் வீதிகள் பலவும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
அரசின் இவ் திட்டம் காரணமாக நீண்டகாலமாக வவுனியா வாழ் மக்களின் நீண்டகால பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியாவின் நான்கு பிரதேசசெயலர் பிரிவுகளைவும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீதிகள் அமைப்பதற்காக 12947.6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தினூடாக வவுனியாவில் நீண்ட காலமாக புனரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக காணப்பட்ட பல்வேறு முக்கிய வீதிகள் காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டு வருகின்றது. இதன்படி 171.17கிலோமீற்றர் அளவிலான வீதிகளிற்கான ஒப்பந்தம் மாகா பொறியியல் நிறுவனத்திற்கும், 100.31 கிலோமீற்றர் வீதிகள் சைனாஸ்ரேற் பொறியியல் நிறுவடத்திடமும் வழங்கப்பட்டுள்ளன.
ஐ-ரோட் திட்டத்தின் கீழ் வடக்கில் 1034.18 கிலோமீற்றர் நீளமான 343 வீதிகள் புணரமைக்கபடவுள்ளதுடன், யாழில் 273.24 கிலோமீற்றரும், கிளிநொச்சியில் 181.78 கிலோமீற்றரும், முல்லைதீவில் 141.34 கிலோமீற்றரும், மன்னாரில் 166.34 கிலோமீற்றர் வீதிகளும் புணரமைக்கப்படவுள்ளது. அதற்கான ஒப்பந்த காலம் இரண்டு வருடங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா