மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சட்ட விரோதமான முறையில் அதிகளவான மண் அகழப்படுவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தி, மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் காலபோக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஏறாவூர்ப்பற்று கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய காணிகள் பாதிக்கப்படுவதுடன் வீதிகளும் போக்குவரத்து செய்யமுடியாத நிலையுள்ளதாகவும் மண் அகழ்வுகளை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள அதிகாரிகள், பொலிஸார், கனிம வள திணைக்களம் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்பாசனத்தினைப் பெற்றுக்கொள்ளுதல், இலவச உரம் பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் விவசாயிகளுக்கான முளை நெல் வழங்குதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் பிரதேச செயலக மட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தினை நடாத்துவதற்கான அறிவிப்புகளும் இதன்போது வழங்கப்பட்டன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு