முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு தடுப்பூசியின் மூலம் தொற்றுக்குள்ளாகாமல் தப்பிக்கலாம் என அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என கொரோனா கட்டுப்பாட்டு தேசிய செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பின்னர் சிலர் முன்னெச்சரிக்கை இன்றி செயற்படத் தொடங்கியுள்ளனர். எனினும் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடாது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கோவிட்19 தடுப்பூசிகள் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வார இறுதியில் நீண்ட விடுமுறை வருவதால் பலர் கொழும்பில் இருந்து பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படுமா? எனக் கேட்டபோது, இதுவரை கட்டுப்பாடுகள் குறித்து எந்தத் தீா்மானமும் எடுக்கப்படவில்லை என சவேந்திர சில்வா கூறினார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை