சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்காக செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என வகை செய்யும் சட்டம் அவுஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டது.
செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு கடந்த வியாழக்கிழமை முதல் அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்தது.
இந்நிலையில், செவ்வாயன்று பேஸ்புக் நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்வதாக பேஸ்புக் அறிவித்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்காக செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் சட்டம் அவுஸ்திரேலியாவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செய்திகளைப் பகிரும்போது ஒரு கணிசமான தொகையைச் சில அவுஸ்திரேலியச் செய்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். ஒரு செய்தியின் மதிப்பை பொறுத்து சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு நியாயமான முறையில் பேரம் பேசும் செயல்பாட்டை மேற்கொள்ள இந்தச் சட்டம் உதவும் என அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
ஒருவேளை, செய்திகளுக்கான மதிப்பை இரு தரப்பினரும் சம்மதிக்கும் விதத்தில் நிர்ணயித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அச்செய்தியின் மதிப்பு ஒரு தனியார் நடுவர் மூலம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் தங்கள் இலாபத்தை இழந்த செய்தி நிறுவனங்களுக்கு உதவுவதாக இந்தச் சட்டம் இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா