ஈக்வடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈக்வடாரில் உள்ள முக்கியமான 3 சிறைகளில் உள்ள பல கைதிகள் கடந்த திங்கட்கிழமை திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் மீது அவர்கள் கொடூர தாக்குதல் மேற்கொண்டதுடன், சிறைக்கும் தீ வைத்தனர்.
கலவரத்தை ஒடுக்க சிறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. குவாயாகுவில் என்ற இடத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20-க்கும் மேற்பட்ட கைதிகளை மற்றொரு பிரிவினர் தலையை துண்டித்து கொடூரமாக கொன்றனர்.
இந்த தகவல் பரவியதை அடுத்து டுவெண்கா நகர சிறைச்சாலையிலும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது தவிர ஈக்வடாரின் மத்திய பகுதியான லடாக்விபா என்ற சிறைச்சாலையில் கைதிகள் திடீர் வன்முறையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த 3 சிறை கலவரங்களிலும் படுகாயம் அடைந்துள்ள 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 கலவரங்களிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக ஈக்வடார் சிறைச்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வன்முறை ஏனைய சிறைகளுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளைச் சூழ இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.