தொடருந்து பயணச்சீட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் கனதியான கடதாசிகளை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம் குறித்த கடதாசிகளை வழங்கும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை மாத்திரம் குறித்த கடதாசிகளை பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கான செலவு தொகை அதிகமாகவுள்ளதாக தெரிவித்து குறித்த நிறுவனம் அவற்றை இடைநிறுத்தியதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜப்பானில் கடதாசி தயாரிக்கும் நிறுவனமொன்றிடம் இருந்து தொடருந்து பயணச்சீட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 30 மில்லியன் கனதியான கடதாசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் 60 மில்லியன் தொடருந்து பயணச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன.
இதற்கமைய ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கனதியான கடதாசிகளை 6 மாத பாவனைக்கு பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொடருந்து பயணச்சீட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் கனிதயான கடதாசிகளை இலங்கையில் தயாரிப்பதற்காக அதன் மாதிரிகள் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு அனுப்பட்டுள்ளன.
எனினும் இதற்காக 6 மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
ஒரு தொடருந்து பயணச்சீட்டுக்கு 2 ரூபா 50 சதம் செலவாகின்றது.
இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.