கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வரும் மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி இடம்பெற உள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 622,000 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை 09 நாட்கள் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பரீட்சை நிலையங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருக்கும் என்பதுடன், மாணவர்கள் அனைவரும் உரிய சுகாதார படிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு பரீட்சை நிலையத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பரீட்சை நாட்களில் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்சமயம் நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையினை நடத்டதுவதற்கு ஏதுவாக அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை