துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குள் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குள் வைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்தக் கொலைக்கு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை அமெரிக்க புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையின் பின்னணியில் டசின் கணக்காக சவுதி நாட்டவர்களுக்கு தடை விதித்த அமெரிக்கா, இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுக்கு எதிராக எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தவறானது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாதது என சவுதி அரேபியா அரேபியா நிராகரித்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக செயல்படும் மொஹம்மத் பின் சல்மான் தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.
துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்கு சென்றபோது, கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் உடல் துண்டாக வெட்டப்பட்டது.
59 வயதான ஜமால் கஷோக்ஜி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான சவுதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சவுதி அரச குடும்பத்தை தீவிரமாக விமர்சித்து வந்தவராவார். அமெரிக்காவின் நாளிதழான வொஷிங்டன் போஸ்டில் இளவரசர் பின் சல்மான் மற்றும் அவரது கொள்கைகளை விமர்சித்து கட்டுரைகளை இவர் எழுதி வந்தார்.
இந்நிலையில் கஷோக்ஜியின் கொலைக்கு சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சலமான் ஒப்புதல் அளித்தார் என்று கூறுவதற்கான மூன்று காரணங்களை அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இளவரசருக்குத் தான் உள்ளது. இளவரசர் சல்மானின் ஆலோசகர்களில் ஒருவரும் மற்றும் பல பாதுகாப்பு தகவல்களுக்கு உட்பட்ட சில உறுப்பினர்களும்தான் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டனர்.
வெளிநாட்டில் இருக்கும் எதிர்ப்பாளர்களை வன்முறையுடன் அடக்குமுறை செய்வதற்கு அவர் வழங்கும் ஆதரவு ஆகியவையே அக்காரணங்களாகும். கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பானவர்கள் என குற்றம்சாட்டப்படும் தனிநபர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலத்திற்கு முன் அவர்கள் கொலைக்கான திட்டத்தை வகுத்தனர்? என்று தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க புலானாய்வுத் துறையின் இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவுதி அரசர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சவுதியுடன் பேசினார்.
அத்துடன், இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே ஒரு சில பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கன் அறிவித்தார்.
மேலும், எந்த ஒரு வெளிநாட்டு அரசின் அதிருப்தியாளர்களையும் இலக்காக வைக்கும் எந்த குற்றவாளிகளையும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்றும் அண்டனி எச்சரித்தார்.
இந்நிலையில், சவுதி இளவரசருக்கு நெருங்கிய சில நபர்கள் மீதும் அமெரிக்க கருவூலத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக, இளவரசருக்கு நெருக்கமான முன்னாள் துணை புலனாய்வு தலைவரும், இந்த கொலையில் ஈடுபட்ட இளவரசரின் தனிப்பட்ட பாதுகாப்புப்படையில் ஒருவரான அஹமத் அசிரி மீதும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றாகும்.
எனினும் சவுதி சட்டங்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ஒரு அங்கமாகவே சவூதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்களை இரத்து செய்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சவூதி அரேபியாவில் எழுந்துவரும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை முன்னிறுத்தி இந்த இந்த நடவக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சவூதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்களில் கீழ் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே இனி அந்நாட்டுக்கு வழங்குவது எனவும் ஜோ பை டனின் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியா அதிக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அந்நாட்டுடனான உறவுகளையும் மறுபரிசீலனை செய்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை தரப்புக்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.